திங்கள், 16 ஏப்ரல், 2012

இவ்வுலகம் இனியது

ஆம், இவ்வுலகம் இனியது.
இதுவரை இத்தனை வருடங்களில்
இதை நாம் உணர்ந்துள்ளோம்.

நமது ஐம்புலன்கள் அனைத்தின் வழியாக
இதை நாம் அனுபவித்துள்ளோம்.

உலகின் அழகுக் காட்சிகளில்
நம் கண்கள் விருந்து கொண்டுள்ளன.

இனிய இசையை நம் செவிகளால்
நாம் கேட்டு மகிழ்ந்துள்ளோம்.

கமழும் இனிய நறு மணங்கள்
நம் நாசியினை மகிழ்வித்துள்ளன.

சுவையான உணவும் பழங்களும்
நம் நாவு நல்ருசி உணரவைத்துள்ளன.

தென்றலும் மழையும் சூரியவொளியும்
வெண்பனியும் நம் தொடுஉணர்வுக்கு
மட்டற்ற மகிழ்ச்சி கூட்டியுள்ளன.

உடல் உள்ளம் இரண்டுக்குமே
இவ்வுலகம் இனியதன்றி வேறல்ல.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

மலரும் முள்ளும்


உன் இதயத்தைக் காயப்படுத்துவது
நீ யாரை நேசிக்கிறாயோ அவர்கள்தான்.
ரோஜாவின் முள் காயப்படுத்தினாலும்
ரோஜா தொடர்ந்து நேசிக்கப்படுகிறது.

விளக்கம்:
நேசத்துக்குரியவர் மகனாக, மகளாக
பேரனாகப் பேத்தியாக இருக்கலாம்.
காயப்படுத்துவதும்
அவர்களாகவே இருக்கலாம்.ஆயினும்
அவர்களை நேசிப்பதை விடமுடியாது.